Sunday, July 14, 2013

நடிப்பு சுதேசிகள் -- சுப்ரமணிய பாரதியார்

நடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) – கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,
வஞ்சனை சொல்வாரடீ! கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே!
நாளில் மறப்பாரடீ.

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? – கிளியே!
அகலிகளுக்கின்பமுண்டோ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ! கிளியே!
பேசிப் பயனென்னடீ

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத்தாலேயெங்கும் கிளியே!
மாங்கனி வீழ்வதுண்டோ!

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடீ! கிளியே!
செய்வதறியாரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வதல்லால் கிளியே!
நம்புதலற்றாரடீ!


மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயிரைக் கிளியே
பேணியிருந்தாரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் கிளியே
அஞ்சிக் கிடந்தாரடீ!


அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ‚கிளியே
ஊமைச் சனங்களடீ!


ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர்கணமும் கிளியே
வாழத் தகுதியுண்டோ?

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில் கிளியே!
இருக்க நிலைமையுண்டோ?


சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவவென்பது போல்
வந்தே மாதரமென்பார்! - கிளியே!
மனத்திலதனைக் கொள்ளார்



பழமை பழமையென்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை! கிளியே!
பாமரரேதறிவார்!


நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! கிளியே!
சிறுமையடைவாரடீ!



சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ! கிளியே!
செம்மை மறந்தாரடீ!



பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் கிளியே!
சோம்பிக் கிடப்பாரடீ!





தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா கிளியே!
வந்தே மாதரமென்பார்!



No comments: