நடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) – கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி,
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே!
நாளில் மறப்பாரடீ.
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே!
நாளில் மறப்பாரடீ.
சொந்த அரசும்புவிச்
சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? – கிளியே!
அகலிகளுக்கின்பமுண்டோ?
அந்தகர்க் குண்டாகுமோ? – கிளியே!
அகலிகளுக்கின்பமுண்டோ?
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்ற
பெண்களின் கூட்டமடீ! – கிளியே!
பேசிப் பயனென்னடீ
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத்தாலேயெங்கும் – கிளியே!
மாங்கனி வீழ்வதுண்டோ!
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடீ! – கிளியே!
செய்வதறியாரடீ!
தேவியர் மானம்
என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வதல்லால் – கிளியே!
நம்புதலற்றாரடீ!
நாவினாற் சொல்வதல்லால் – கிளியே!
நம்புதலற்றாரடீ!
மாதரைக் கற்பழித்து
வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலுயிரைக் – கிளியே
பேணியிருந்தாரடீ!
பேதைகள் போலுயிரைக் – கிளியே
பேணியிருந்தாரடீ!
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் – கிளியே
அஞ்சிக் கிடந்தாரடீ!
அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ – கிளியே
ஊமைச் சனங்களடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர்கணமும் – கிளியே
வாழத் தகுதியுண்டோ?
மானம்
சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில் – கிளியே!
இருக்க நிலைமையுண்டோ?
ஈனர்க் குலகந்தனில் – கிளியே!
இருக்க நிலைமையுண்டோ?
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவவென்பது போல்
வந்தே மாதரமென்பார்! - கிளியே!
மனத்திலதனைக் கொள்ளார்
வந்தே மாதரமென்பார்! - கிளியே!
மனத்திலதனைக் கொள்ளார்
பழமை பழமையென்று
பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை! – கிளியே!
பாமரரேதறிவார்!
பழமை இருந்த நிலை! – கிளியே!
பாமரரேதறிவார்!
நாட்டில்
அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!
சிறுமையடைவாரடீ!தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!
சொந்த
சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ! – கிளியே!
செம்மை மறந்தாரடீ!
சிந்தை இரங்காரடீ! – கிளியே!
செம்மை மறந்தாரடீ!
பஞ்சத்தும்
நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!
சோம்பிக் கிடப்பாரடீ!
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!
சோம்பிக் கிடப்பாரடீ!
தாயைக் கொல்லும்
பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா – கிளியே!
வந்தே மாதரமென்பார்!
வாயைத் திறந்து சும்மா – கிளியே!
வந்தே மாதரமென்பார்!
No comments:
Post a Comment