Monday, July 8, 2013

கி.பி.11 ம் நூற்றாண்டிலேயே பட்டினத்தடிகள் பாடிய பாடல் இது.

இப்படி ஒரு பாடலை தன் தாய்க்காக எந்த மொழிப் புலவனோ
கவிஞனோ 
இயற்றியதாகத் தெரியவில்லை. கி.பி.11 ம் நூற்றாண்டிலேயே 
பட்டினத்தடிகள் 
பாடிய பாடல் இது. இப்பாடலில் உள்ள சில வரிகளை இன்னும் 
பிணம் எரிக்கும் இடங்களில் நீங்கள் கேட்டிருக்கக்கூடும். அழியா 
வண்ணமும் மறவா வண்ணமும் பாடலை பதித்திருக்கிறார் பட்டினத்தார். தன் தாயின் இறுதிச் சடங்கில் பாடிய சோக குமுறல். பாடலைப் பார்ப்போம். 

------------------------------------------------------------ 
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் 

பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு 

கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை 

எப்பிறப்பில் காண்பேன் இனி !

முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே 





அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி 

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ 

எரியத் தழல் மூட்டுவேன் !


வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் 

கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச் 

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ 

விறகிலிட்டுத் தீமூட்டு வேன் !


நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை 

தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல் 

கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ 

மெய்யிலே தீமூட்டு வேன் !


அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு 

வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள 

தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ 

மானே எனஅழைத்த வாய்க்கு !


அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் 

கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள 

முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் 

மகனே எனஅழைத்த வாய்க்கு !


முன்னை இட்ட தீ முப்புறத்திலே 

பின்னை இட்ட தீ தென்இலங்கையில் 

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே 

யானும் இட்ட தீ மூள்கமூள்கவே !


வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல் 

ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக் 

குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் 

கருதி வளர்த்தெடுத்த கை !


வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் 

வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும் 

உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என் 

தன்னையே ஈன்றெடுத்த தாய்!


வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் 

நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க 

எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் 

எல்லாம் சிவமயமே யாம் !

-- பட்டினத்தார் --

No comments: