Monday, April 14, 2014

நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை அல்ல உனக்கு தமிழ்ப் புத்தாண்டு

தமிழருக்கு தொடராண்டு இல்லை. தற்பொழுது நாம் கடைப்பிடிப்பது சித்திரை மாதம் முதல்நாள். அத்துடன் தை முதல் நாளைப் புத்தாண்டு பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம். மற்றைய இனத்தவர் களுக்கு புத்தாண்டு ஒன்றுதான். தமிழருக்கு மாத்திரம் ஏன் இரு ஆண்டுகள்? ஆகவே தமிழராகிய நாம் புத்தாண்டு தை முதல் நாளா! சித்திரை முதல் நாளா என்பதைத் திட்டவட்டமாக முடிவெடுத்து அதைப் பின்பற்ற வேண்டும்.

தற்பொழுது நாம் கொண்டாடும் புத்தாண்டு, சாலிவாகனன் எனும் வடநாட்டுமன்னரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படு கிறது. இவர் கி.பி.78இல் இம்முறையை ஏற்படுத்தினார். அவ்வாண்டுகள் பிரபவ விபவ பிரமோதூத என்ற 60 ஆண்டுகள். சித்திரை தொடக்கம் சுழற்சி முறையில் வருகின்றன. இவைகளில் ஒரு ஆண்டு கூட தமிழ்ப் பெயரோ அல்லது தமிழினத்துடன் தொடர்புடைய தாகவே இல்லை. ஆகவே தான் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவது முறையல்ல என்று தீர்மானித்து, 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் புலவர்கள் கூடி தமிழர்க்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். ஆனால் அக்காலத்தில் பார்ப்பனர் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந் தமையால், அவர்களின் கடும் எதிர்ப்பால் இம்முடிவை ஒத்திவைக்க நேரிட்டது.

1971ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டு முதல்மைச்சராக இருந்த பொழுது, திருவள்ளுவர் ஆண்டு ஏற்று, தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். ஆனால் பார்ப்பனரின் எதிர்ப்பு வலுவாக இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு அடிவருடி களாக இருந்து செயற்பட்ட தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளாலும் இத்திட் டம் குறித்து மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையே காணப்படுகிறது.

மீண்டும் கலைஞர் தற்பொழுது ஆட் சிக்கு வந்ததும், தான் ஒரு தமிழர், ஆகவே தான் 1971ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்த தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என் பதை மீண்டும் ஆணை பிறப்பித்து, அதற் கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா தொடங்கி வைத்த போது, தை முதல் நாளே தமிழ்த் திருநாளாக கலைஞர் அறிவித்ததையும் தெரிவித்து, இது இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படு கின்றன என்றும் தெரிவித்தார். இது ஜெய லலிதாவிற்குப் பிடிக்கவில்லை. தான் ஒரு பிராமணப் பெண், தான் மீண்டும் தலை மைப் பதவிக்கு வரும்போது இச்சட்டத்தை மாற்றி அமைப்பேன் என்று முழக்கமிட்டு உள்ளார். ஆனால் கலைஞர் கூறுகிறார். செம்மொழி வருமென்று கருதியது உண்டா? வந்ததா இல்லையா? அதே போல தமிழாண்டு தை முதல் நாளே என்று வந்தே தீரும்.

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்துகின்றன.

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை அல்ல உனக்கு

தமிழ்ப் புத்தாண்டு

தரணி ஆண்ட தமிழருக்குத்

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தையே முதற்றிங்கள்;

தை முதலே ஆண்டு முதல்

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று,

பல்லாயிரத்தாண்டாய்த்

தமிழர் வாழ்வில்

புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்.

புதுவருடப்பிறப்பு என்பது மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள். சித்திரை மாதம் தமிழரின் தாயகங்களான தமிழ்நாடு, புதுவை, தமிழீழம் ஆகிய பிர தேசங்களில் சூரிய வெப்பம் அதிகரிக்கும் மாதமாக உள்ளது. தை மாதம் சூடும் குளிரும் குறைந்த மாதம். அத்துடன் விவசாயிகள் அறுவடை முடித்து விட்டதால் தானி யங்களைத் தங்களது வீட்டிற்குக் கொண்டு வந்து மனநிறைவுடன் குடும்பத்தினர் அனைவருடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடு வார்கள். இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று உலகத் தமிழினம் நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது.

----------------------நன்றி:சி.செல்லையா தலைவர், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், கனடா- சுதந்திரன் வார இதழ், ஈழம் (தமிழாலயம் - 2008 ஜூலை - ஆகஸ்ட்)

Wednesday, February 5, 2014

வீரமங்கை செங்கொடி

மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும்!!!

வீரமங்கை தோழர் செங்கொடி
தோழர் செங்கொடி : மரண தண்டனைக்கு எதிரான இறுதி உயிராக இருக்கட்டும்!

தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்  28.08.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த செங்கொடி (வயது 27) அவர்களுக்கு ஈகவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.
இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
வீரமங்கை தோழர் செங்கொடி
|| தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியதுபோல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்
– இப்படிக்கு தோழர் செங்கொடி ||
தோழர் செங்கொடியின் இறுதி வேண்டுகோள் கடிதம்
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவர் ஈகி முத்துக்குமாரின் விவரணப்படத்தை இயக்கிய மகேந்திரன் அவர்களின் உடன்பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத் தக்கது. மூவரைக் காப்பாற்றக் கோரி சென்னை கோயம்பேட்டில் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண் வக்கீல்களின் போராட்டத்தில் நேற்று சனிக்கிழமை கலந்துவிட்டுச் சென்றுள்ளார்.பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்துச் செய்யக் கோரி இந்தப் பெண் தீக்குளித்து மரணமானதாக தெரிவித்துள்ளார். மரண தண்டனையை குறைக்குமாறு அனுப்பப்பட்ட கருணை மனுவை இந்திய உள்துறை அமைச்சும் ஜனாதிபதியும் நிராகரித்த நிலையில் மக்கள் மன்றத்தின் முக்கியஸ்த்தர் செங்கொடி பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும் இன்று தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை இரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் பெருகிவரும் நிலையில் காஞ்சீபுரத்தில் தமிழச்சி செங்கொடி தீக்குளித்து இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோழர் செங்கொடி தொடர் போராட்ட களத்தில்...
|| இது தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…. 
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.

முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.
3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். என்றார்
ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கியப் பேரவையில் இன்று கண்ணகி விழா நடைபெற்றது, அதில் கலந்து கொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது,
இன்று தன் சகோதரன்…, உடன் பிறவா சகோதரன், நம் தமிழ் சகோதரன், பேரறிவாளன், சாந்தன், முருகன்…. “குற்றமற்றவன்” என்பதை மெய்ப்பிக்க வேண்டி காஞ்சிபுரத்தில் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டு நெருப்பாகிவிட்டாள் செங்கொடி என்கிற ஒரு தமிழ் சகோதரி.
அந்த கன்னகியின் சாபத்திலும் நீதியிருந்தது… இந்த செங்கொடியின் சாவிலும் நீதி இருக்கிறது…. நீதி வென்றே தீரும், நம் தேசபிதா காந்தியவர்கள் 1931 வருடத்திலேயே தூக்கு தண்டனை கூடாது என்றார்.
பண்டித நேரு அவர்களும், ஒரு மனிதனை தேதி குறித்து வைத்து கொல்லும் கொடுரம் கூடாது என்றார்கள். 1941-ம் வருடத்தில் இந்திய அரசியல் சட்ட அமலாக்க விவாதத்தில் பேசிய அண்ணல அம்பேத்கார் அவர்களும் தூக்கு தண்டனை கூடாது என்றார்கள்.

இன்று உலகில் உள்ள 137 முன்னேறிய நாடுகள் தூக்கு தண்டனையை ஒழித்து விட்டார்கள். ஆனால் நம் நாட்டில் கூட நீன்ட நாட்களாக தூக்கு தண்டனை கொடுப்பதில்லை.
அன்று திருப்பெரும்புதூரில் நடந்த சம்பவத்திற்கும் இந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் சம்பந்தமில்லை….. முதலில் இதே வழக்கில் 24 நபர்களுக்கு தூக்கு கொடுத்தார்களே.
தோழர் செங்கொடி தொடர் போராட்ட களத்தில்...
பின்னர் எப்படி அவர்கள் மீது குற்றமில்லை என்று முடிவு செய்யப்பட்டதோ அது போலவே, இவர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் பொய்யானது. அதை நிருபிக்க இன்னும் ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
அன்று பாண்டிய மன்னன் அரண்மனையில் நடந்த கொடூரம் இப்போது தமிழகத்தில் நடந்துவிடக்கூடாது.. தமிழக முதல்வர் அவர்களால் இதை தடுக்கும் வாய்ப்புள்ளது… நாடே இப்போது முதல்வரின் முடிவை எதிர்பார்க்கிறது’’என்று பேசினார் வைகோ.
இப்படியான அநியாய உயிர் இழப்புகளைத் தமிழக உறவுகள் தவிர்க்க வேண்டும். இந்த போராட்டத்தின் வெற்றி இந்த மூவரின் விடுதலையோடு மட்டும் சுருங்கி விடக்கூடாது. ஒட்டுமொத்த மரணதண்டனையையும் ஒழிப்பதிலேயே நமது விடுதலை பூரணப்படும் என்பதையும் உறுதியாக நினைவில் கொள்வோம் தோழர்களே!
புகலிடத்தில் இன்னமும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக தேவையான அளவு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.. கண்டனத்துக்குரியது.
” வீரமங்கை செங்கொடிக்கு எங்கள் வீர அஞ்சலிகள். “