தியாக வேங்கை திலீபன்!
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அதே துணை.
என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வீரத்திற்கும் துணிவிற்கும்
அன்பு காரணமாயிருக்க முடியும் என்று சொன்னான் வள்ளுவப் பெருந்தகை!
இந்தக்குறளின் பொருளை வாழ்ந்து நிரூபித்தவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள்... விடுதலைப் புலிகள்!
தான் பிறந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் கொண்ட அன்பால்,அளவற்ற நேசத்தால், கருவி ஏந்தி களம் வந்து நின்று, வீரப் போர் புரிந்த போராளிகள் அவர்கள்!
மரணம் வந்துவிடும் என்பது தெரிந்தும், எந்த மண்ணின் விடுதலைக்காக சண்டயிடுகிறோமோ, அந்த மண்ணில் ஒற்றை நொடியும் தான் வாழ முடியாது என்பதை உணர்ந்தும், தலையை விட விடுதலை முக்கியம் என்று போராடி மாண்ட வீர மைந்தர்கள் அங்கே ஆயிரம் ஆயிரம்!
அடுத்த தலைமுறையாவது அமைதியாக, தன சொந்த நாட்டில், ஆனந்தமாக சுதந்திரக் காற்றை சுவாசிக்கட்டுமே என்று தனது மூச்சுக்காற்றை முற்றாக நிறுத்திக்கொண்ட அற்புதத்தின் அற்புதங்கள் அந்த வீர மறவர்கள்!
அவலங்களை அனுபவிக்கும் போதெல்லாம் பெண் என்பவள் கண்ணீரோடு நிற்க வேண்டும் என்று ஆயிரம்ஆயிரம் ஆண்டுகளாய் போதிக்கப்பட்ட அநீதியைத் தகர்த்தெறிந்து கருவிகளோடு களத்தில் நின்ற புரட்சிப் பெண்களின் பூமிதான் ஈழம்!
அறிவு பெற்ற மனித குலம் எப்போதும் விடுதலையோடு வாழவே
விரும்புகிறது. அந்தவிடுதலை பறிக்கப்படும்போது எழுந்து போராடுகிறது! அப்படி பல போராட்டங்களை இந்த பூமி பார்த்திருக்கிறது.
விடுதலைக்கான போராட்டங்களின் வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு
போராட்டம்தான் ஈழ விடுதலைப் போராட்டம்!
உலகில் வேறெங்கும் நிகழ்ந்திராத வகையில் நேர்மையோடும்
ஒழுக்கத்தோடும் நடத்தப்பட்ட போர் விடுதலைப் புலிகளின் போர்! தியாகம் என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தவர்கள் அந்த புலி வீரர்கள்!
விடுதலை வேட்கையோடு, அவர்கள் வீரச்சமர் புரிந்த போது, நஞ்சு கடித்து அவர்கள் மாண்டார்கள்.... உடலில் குண்டு சுமந்து வெடித்தார்கள்..... துப்பாக்கியின் தோட்டாக்களுக்கு பலியானார்கள்..... சிங்களத்தின் வெஞ்சிறைகளில் வீரச் சாவைத் தழுவினார்கள்!
இந்தப் பேருலகு வியக்கும் வகையில் வீரம் காட்டி மாண்ட புலிகளுக்கு மத்தியில் புலிகள் நெஞ்சின் ஈரம் காட்டி மாண்ட பெருந்தகை திலீபன்!
செப்டம்பர் 15 தொடங்கி 26 வரைக்கும் 12 நாட்கள் தண்ணீர் அருந்தா உண்ணாவிரதப் போராட்டம்!
இந்தத் தரணி இதற்குமுன் கண்டிருக்குமா? வீசும் காற்றும் அலைமோதும் கடலும் இப்படி ஒரு போராட்டத்தை இவனுக்கு முன்கேள்விப்பட்டிருக்குமா???
உலகம் முழுமைக்கும் அன்பைச் சொன்ன புத்தனின் நாடு ஒருபுறம்,அகிம்சை சொன்ன காந்தியின் நாடு மறுபுறம் நடுவில் நின்று திலீபன் காட்டினான் தமிழரின் போர்த்திறம்!
போகிற போக்கில் துப்பாக்கி எடுத்து சுடுகிறவர்கள் புலிகள் என்று நினைத்தவர்க்கெல்லாம், ஆயுதமேந்துவதிலே ஆர்வம் கொண்ட மனநோயாளிகள் அல்ல புலிகள் என்பதைப் புரிய வைத்தவன் திலீபன்!
புலிகள் கருவிகளை நம்பி நிற்கிறவர்கள் அல்ல தம் நெஞ்சுரத்தை நம்பியே களமாடுகிறவர்கள் என்பதை உலகிற்கு அறிவித்தவன் திலீபன்!
ஒரு சொட்டுத் தண்ணீருமின்றி கொஞ்சம் கொஞ்சமாய் உடலில் இருந்து உயிரை பிதுக்கி பிதுக்கி வெளியே தள்ளிய வீரப் புதல்வன் திலீபன்!
அடைவதர்க்கோர் விடுதலை இருந்தது.... அன்பு செய்ய ஆயிரமாயிரம் மக்கள் இருந்தார்கள்..... அரவணைத்து வழிநடத்த ஆற்றல் மிகு தலைவர் இருந்தார்.... எல்லாம் இருந்தும் திலீபன் இல்லாமல் போனான்!
உலகில் நடைபெறும் போராட்டங்களுக்கெல்லாம் புதிய திசை வழியைக்காட்டியவன் திலீபன்!
திலீபன் காந்திய வழியில் போராடியதாகச் சிலபேர் சொல்கிறார்கள்.... அது பொய்! காந்திதான் திலீபன் வழியில் போராட முயற்சித்து பலமுறை தோற்றிருக்கிறார்! இதுதான் உண்மை!
திலீபன் காந்தியவாதி அல்ல.... அவன் கம்யுனிஸ்ட்டோ,பெரியாரிஸ்ட்டோ அல்ல..... அவன் பிரபாகரனிஸ்ட்!
தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தை புதிய திசை வழியில் திருப்பிய பிரபாகரன் என்னும் தத்துவத் தொகுப்பின் விளைச்சல்
திலீபன்!
அதனால்தான் அவ்வளவு நெஞ்சுறுதி.... அதனால்தான் அவ்வளவு வீரம்..... அதனால்தான் கொண்ட கொள்கையில் அவ்வளவு தெளிவு...... அதனால்தான் அடக்கி முடக்கப்பட்ட மக்களின் மீது அவ்வளவு அன்பு!
உடல் பிணிநீக்கும் மருத்துவம் பயின்றவன் சமூகத்தின் பிணி நீக்க,தானே மருந்தாக மாறிப்போனான்!
நட்சத்திரமாய் இருந்து தனித் தமிழீழக் குடியரசை பார்ப்பேன் என்று சொல்லிப் போனானே.... உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் நட்சத்திரங்கள் அழகாகத் தெரியும்.... மானமுள்ள தமிழ் பிள்ளைகளுக்கு மட்டுமே அது திலீபனின் முகமாய்,உணர்வாய், உயிராய்த் தெரியும்! நட்சத்திரங்களைப் பார்க்கின்ற போதெல்லாம் அவன் கொடுத்துச் சென்ற பெரும் பணி நினைவுக்கு வரும்.....
இன்று திலீபனின் நாள்....
அவன் உயிரை பறித்த அயோக்கியர்களோடு சமரசமற்ற முறையில் சமர் செய்யும் சிந்தனையை நாம் புதுப்பித்துகொள்ளும் நாள்!
அவன் விட்டு சென்ற பணியை விரைந்து முடிக்க தமிழர்கள் அனைவரும் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டிய தருணம்!
தமிழர்க்கென்ற தேசத்தை அடைவதே அண்ணன் திலீபனுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கமாக இருக்கும்! வானத்தில் இருந்து நம் அண்ணன் பார்த்து கொண்டிருக்கிறான்..... நம்மை வாழ்த்திக் கொண்டிருக்கிறான்.....
நாம் அறிவாயுதம் சுமந்து களமாடுவோம்....
அண்ணன் திலீபன் கனவை நனவாக்குவோம்!
No comments:
Post a Comment