முதலில் நம் மொழி எதனால் ஆழியும் ??
ஆதியில் தமிழர்களாகிய நாம் பர்மாவில்
அடிக்கப்பட்டோம்; இடையில்
மலேசியாவில் அடிக்கப்பட்டோம்; பிறகு, எங்கோ எங்கோவெல்லாம் அடிக்கப்பட்டோம்; பின், பூர்வீக
மண்ணான தமிழீழத்தில் அடிக்கப்பட்டோம். தாயகத்தமிழகத்திலும் இன்று அடிபடுகிறோம்.
இப்படி உலகின் எந்த மூலையில் நாம் அடிப்பட்டபோதும் எந்த மதத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ நம்மை இந்த உலகம்
அடையாளப்படுத்தவில்லை. நம்மை நம்
மொழியின் வாயிலாக ’தமிழர்கள்’ என்றே உலகம் அடையாளப்படுத்தியது; அடையாளப்படுத்துகிறது.ஆனால், நாமோ சாதியையும், மதத்தையும்
தூக்கிப்பிடித்து நம் தாய்மொழி தமிழை பேசுவது இழிவு(?) எனக்கருதி இழிவாய் கிடக்கிறோம்.
"ஒரு தேசிய இனத்திற்கு மொழிதான் உயிர்" என்றார்-தந்தை பெரியார்.
"மொழியானது ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் போன்றது" என்றார்- காந்தி.
"யார் ஒருவர் மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரித்து அதற்காக போராடவில்லையோ, அவர் ஒரு குடிமகனே அல்ல!"என்றார் - புரட்சியாளர் லெனின்.
"உழைப்பிலிருந்து தோன்றியதே மொழி" என்றார் - புரட்சியாளர் ஏங்கல்சு.
"ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால், அந்த மொழியை சிதைத்து விடு! அந்த இனம் தானாக அழிந்து விடும்!!" என்றான் - இட்லர்.
"என் மொழி நாளை இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன்" என்று முழங்கினான் அவாமொழி கவிஞன் ரசூல் கம்சத்.
இப்படி உலகத்தவர் அனைவரும் தத்தம் தாய்மொழியை ‘உயிரென’ கருதி
நின்றார்கள்.ஆனால், நாமோ ‘மொழிதானே?’ என்று கருதி சாதியையும்,மதத்தையும் தூக்கிப்பிடித்தோம். விளைவு.? நம் மொழி,பண்பாடு,கலாச்சாரம் எல்லாம் சிதைந்தது;
தமிழர்கள் நாம் சாதியாய், மதமாய் பிளவுற்றோம்; சொந்த இன உறவுகளுக்குள்ளே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அடித்துக்கொண்டு செத்தோம்;பின், ‘ஊர்
இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பது
போல வந்தேறிகள் (திராவிடர்கள்) நம்
தாய்நிலத்தை ஆக்கிரமித்தார்கள்; தமிழர்கள்
நம்மை திராவிடர்கள்(?) என்றார்கள்; உரிமை பறி போனது; உடைமை பறிபோனது; கடைசியில், ஈழத்தில்
ஒன்றே முக்கால் இலட்சம் தமிழ் உயிர்களும், தமிழகத்தில்
ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் உயிர்களும் பறிபோனது.இப்போது ‘தமிழர்’ என்ற உணர்வே செத்துப்போய் நம் அடையாளத்தையே இழந்து, மேடை போட்டு ‘நாம் தமிழர்! நாம் தமிழர்!’ என்று முழங்கி நம்மை தட்டி எழுப்ப வேண்டிய இழிநிலைக்கு
தள்ளப்பட்டுள்ளோம். இவ்வளவுக்கும் காரணம், ‘நம்
தாய்மொழி தமிழ்தான் நம் அடையாளம்!’ என்று
உணராததே.
நம் மொழியை காக்க குறைந்தது என்ன செய்யலாம்.?
· தமிழோடு பிற மொழியை கலந்து பேசுவதை தவிர்ப்போம்.நம் தாய்மொழி தமிழை பிற மொழி கலப்பில்லாமல் பெருமையோடும், செருக்கோடும், திமிரோடும் பேசுவோம்.
· நம் கையெழுத்தை தமிழிலே இடுவோம்.பிறரையும் தமிழிலே இட வலியுறுத்துவோம்.
· ஒரு நாளில் ஒரு மணிநேரமாவது பிறமொழி கலப்பில்லாது தமிழிலே பேசுவோம்.
· பிறமொழி பெயரை நீக்கி தனித்தமிழிலே நம் பெயரை சூட்டிக்கொள்வோம். நம் பிள்ளைகளுக்கும் தமிழ்ப் பெயரையே சூட்டுவோம்.
· நம் பெயருக்கு முன்னால் எழுதுகிற தந்தை பெயரின் முதல் எழுத்தை தமிழிலே எழுதுவோம்.
· நாம் தொழில் செய்யும் இடங்களில் பெயர்ப்பலகைகளை தமிழிலே நிறுவுவோம்.
· நம் மொழியை சிதைக்கும் ‘கொலைவெறி’ பிடித்த பாடல்களை புறக்கணிப்போம்.
· அலைபேசி எண்ணை தமிழிலே குறிப்பிடுவோம். குறிப்பிடும்போது ‘சீரோ’, பூச்சியம்’ என்பதனை தவிர்த்து ‘சுழியம்’ எனக்குறிப்பிடுவோம்.
· நம் மொழியுடன் கலந்துள்ள ஒரு பிறமொழிச் சொல்லை அன்றாடம் நீக்கிப்பேசுவோம்.
· அலைபேசியில் பேசத் துவங்கும் போது ’அலோ’ என்பதனை தவிர்த்து, ‘வணக்கம்’ என்றே துவங்குவோம்.
· பேசும்போதும், எழுதும்போதும் வடமொழிச்சொற்களையும்,எழுத்துக்களையும் புறக்கணிப்போம்.
· நம் பிள்ளைகளை தமிழ்வழியிலே கல்விகற்கச்செய்வோம்.
· ஆங்கிலப்புலமையை தேவைப்படும் இடங்களில் மட்டும் பயன்படுத்தி, மற்ற இடங்களில் தமிழை முன்னிலைப்படுத்த, நம் பிள்ளைகளுக்கு தமிழுணர்வை ஊட்டி வளர்ப்போம்.
No comments:
Post a Comment